நாட்டிலுள்ள உள்ள அனைத்து பாடசாலைகளின் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த A D Susil Premajayantha தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் நேற்றைய தினம் (28-07-2023) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் 2024 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகளை நடத்துவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்க அச்சுத் திணைக்களம் 2024ம் ஆண்டுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், அச்சடிக்கும் பணியை நவம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருடம் (2023) அரச சேவையில் தற்போதுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் 12,000 பேர் பாடசாலைகளின் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய சேவை அமைப்புடன் கூடிய ஊழியர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் இதன் மூலம் பாடசாலைகளின் நிதி மற்றும் நிர்வாக விடயங்களை அதிபர்கள் இலகுவாக நிர்வகிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினூடாக பாடசாலைகளின் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டின் முதல் தவணை பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
No comments: