News Just In

7/27/2023 08:13:00 AM

அவுஸ்திரேலிய கடற்கரையில் 50 ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் திடீரென ஒதுங்கியநூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்களில் 50 இற்கும் மேற்பட்டவை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த திமிங்கல குழு முதல் முதலில் மேற்கு அவுஸ்திரேலியாவின் துறைமுக நகரமான அல்பனியின் செய்ன்ஸ் கடற்கரை பகுதியில் காணப்பட்டது. மாலையில் திடீரென கரை ஒதுங்க தொடங்கின.

உடனே மேற்கு அவுஸ்திரேலியாவின் பல்லுயிர் பாதுகாப்புத்துறை, திமிங்கலங்களை கண்காணிக்க ஒரு குழுவை அமைத்தது. இது குறித்து பல்லுயிர் பாதுகாப்புத்துறையின் மேலாளரான பீட்டர் ஹார்ட்லி கூறுகையில்,

"இதுவரை 51 திமிங்கலங்கள் இறந்து விட்டன. இன்னும் 46 திமிங்கலங்கள் உள்ளன. அவற்றை மீண்டும் தண்ணீருக்குள் விட்டுவிட்டு, ஆழமான பகுதிகளுக்கு நீந்திச் செல்ல வைப்பது தான் எங்களது நோக்கம். எங்களால் முடிந்தவரை எத்தனை திமிங்கலங்களை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுவோம்" என கூறினார்.

திமிங்கலங்களுக்கு உதவும் குழுவில் அவுஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கடல் விலங்கின நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் கப்பல்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி திமிங்கலங்களை கடலுக்குள் விட போராடி வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் உதவ முன்வந்திருக்கிறார்கள்.இந்த அசாதாரண நிகழ்வுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருக்கலாம் என வனவிலங்கு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: