News Just In

5/17/2023 09:16:00 PM

கிழக்கு ஆளுநர் நியமனம்: நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞை - ஜீவன்தொண்டமான் தெரிவிப்பு!




தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு ஒரே தடவையில் தமிழ் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த சமிக்ஞையையும் இதன்மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று ஆளுநர்களுக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியதாவது, "தமிழ் பேசும் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளுக்குத் தமிழ் ஆளுநர்களை நியமிக்குமாறு தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். மக்களின் கோரிக்கையும் அதுவாகவே இருந்தது. அந்த கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றியமை வரவேற்கத்தக்கது.

வடக்கு மாகாணத்தில் தமிழ் ஆளுநர்கள் பதவி வகித்தபோதும் கிழக்கு மண்ணுக்கு முதன்முறையாகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமையும் மகிழ்ச்சி.

அதுவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அந்த பதவிக்கு வந்திருப்பது எமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

நாட்டில் மாகாணசபைகளில் தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லை. எனவே, நிர்வாகம் என்பது ஆளுநர் வசமும், பிரதம செயலாளர்கள் வசமும்தான் உள்ளன.

மேலும், கிழக்கு மாகாணத்தில் சிறந்த சேவையை புதிய ஆளுநர் வழங்குவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அவர் மூலம் சிறந்த சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

No comments: