News Just In

5/23/2023 06:17:00 AM

தென்னமெரிக்காவில் பாடசாலை விடுதியில் பயங்கர தீ விபத்து: பரிதாபமாக உயிரிழந்த 20 மாணவர்கள்!

தென்னமெரிக்காவில் உள்ள நாடொன்றில் பாடசாலை விடுதியில் மாணவர்கள் தூங்கி கொண்டிருந்த வேளை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது,

சமபவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கயானாவின் மஹ்டியாவில் உள்ள பாடசாலை விடுதியில் நேற்று அதிகாலை மாணவர்கள் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த விடுதியின் ஒரு அறையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியுள்ளது.

தீ விபத்து தொடர்பில் தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணித்தியாலம் போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே மீட்பு படையினர் விடுதிக்குள் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும், அதிகாலை நேரம் மாணவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் தீ விபத்தில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: