News Just In

3/06/2023 08:15:00 AM

குற்றச்சாட்டு அறிக்கையில் வெளிவந்த உண்மைகள் - கோட்டாபயவுக்கு எதிராக திரும்பிய அதிகாரிகள்..!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறியமைக்கு பின்னால் இருந்து பாதுகாப்பு குறைபாடுகள் அறிக்கையில் இருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்த அறிக்கை கடந்த வாரத்தில் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டபோது சில தகவல்கள் கசிந்துள்ளன. இதன் அடிப்படையில் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அப்போது பதவியில் இருந்த கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரைகளை உரிய முறையில் செயற்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு அறிக்கையில் இருப்பதாக அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பொதுஜன பெரமுன கட்சியினர் கோரி வருகின்றனர்.

கோட்டாபயவின் வெளியேற்றத்துக்கு பின்னால் இருந்த பாதுகாப்பு குறைப்பாடுகள் தொடர்பான ஆணைக்குழுவில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, முன்னாள் இராணுவத்தளபதி தயா ரட்நாயக்க மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி ரொசான் குணதிலக்க ஆகியோர் அங்கம் வகித்தனர்.

இந்தக் குழுவின் அறிக்கையின்படி, முன்னதாக கோட்டாபய ராஜபக்ச, அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்களின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர, மாளிகைக்கு அருகில் சென்று போராட்டம் நடத்தியமை, பாதுகாப்பு குறைப்பாட்டில் முக்கிய சம்பவம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் கோட்டாபய ராஜபக்சவின் மீரிஹன இல்லத்தை சுற்றி ஆர்ப்பாட்டங்கள் நடக்கப்போகின்றமை தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிந்திராமை மற்றும் ஒரு பாதுகாப்பு குறைப்பாடு என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் தாம் அதனை முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும், உரிய இடங்களுக்கு தகவல்களை வழங்கியதாகவும் அரச புலனாய்வு பிரிவின் உயர்மட்டம் தெரிவித்துள்ளது. எனினும் அதற்கான ஆதாரத்தை அது சமர்ப்பிக்கவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்படுகின்றது.

“இதேவேளை கோட்டாபயவுக்கும் அரச புலனாய்வுப்பிரிவின் தலைவர் மொஹமட் சாலேக்கும் இடையில் தொடர்புகள் இல்லாமல் இருந்துள்ளது.

எனினும் இதனை மூன்று முன்னாள் தளபதிகள் அடங்கிய ஆணைக்குழு தமது அறிக்கையில் குறிப்பிடவில்லை. இருப்பினும் அண்மையில் இந்திய இல்லத்தில் விருந்தின்போது கோட்டாபய ராஜபக்சவும் சாலேயும் சந்தித்துக்கொண்டபோது தாம் நாட்டில் இருந்து வெளியேறிய பின்னர், சாலே தொடர்பு கொள்ளவில்லை என்பதை கோட்டாபய, நேரடியாக தெரிவிதுள்ளார்.

இதேவேளை அநுராதப்புரத்தில் வசிக்கும் கோட்டாபயவுக்கு ஆலோசனைகளை கூறும் ஞானக்காவின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தபோதும், முன்னாள் மூன்று தளபதிகளின் அறிக்கையில் அந்த விடயம் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.” என்றும் குறித்த ஆங்கில செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

No comments: