News Just In

2/24/2023 09:59:00 PM

பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இந்த நாட்டிலே இல்லை – வலயக் கல்விப் பணிப்பாளர் சிறிதரன்




ஏ.எச்.ஏ. ஹுஸைன்

21 ஆம் நூற்றாண்டிலே தொழில் உலகை எதிர்பார்க்கும் விடயம் பலரிடம், குறைவாகவும், அதுஇல்லாமலுமுள்ளன. நாட்டிலே அதிகளவு பட்டதாரிகள் உள்ளார்கள். பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இந்த நாட்டிலே இல்லை. என பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளிலிருந்து இம்முறை கல்விப் பொதுத்தர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப்பகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழில் வழிகாட்டல் ஆலோசனை மாநாடு மட்.பட்.களுதாவளை மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(24.02.2023) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

இலங்கையில் எந்தக் கல்வி வலயமும் மேற்கொள்ளாத செயற்பாட்டை முதன் முதலில் நாம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் முன்னெடுத்திருக்கின்றோம். உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர் மாணவர்கள் வீணாக பொழுதைக் கழிக்காமல் தொழில் உலகுக்காக தயார்படுத்த வேண்டிய பொறுப்பு மாணவர்களிடத்தில் உள்ளது. மாணவர்கள் இந்த தேசத்தின் சொத்துக்கள். எதிர்காலத்தில் பதவிகளை அலங்கரிக்கப் போகின்ற அணிகலன்கள் தான் தற்போதைய மாணவர்கள்.

21 ஆம் நூற்றாண்டிலே தொழில் உலகை எதிர்பார்க்கும் விடயம் பலரிடம், குறைவாகவும், அதுஇல்லாமலுமுள்ளன. நாட்டிலே அதிகளவு பட்டதாரிகள் உள்ளார்கள். பட்டதாரிகளுக்கு என்ன தொழில் வழங்கலாம் என்பது தொடர்பில் சரியான திட்டம் இந்த நாட்டிலே இல்லை. அவர்களுடைய திறன்களை சரியாக இனங்காண்பதற்கான பொறிமுறைகள் இல்லை. ஒவ்வொரு பட்டங்களையும் பெறுபவர்கள் வித்தியாசமான திறமைசாலிகள். அவர்களுக்குரிய தொழில் நிலைமைகள் இங்கு வகுக்கப்படவில்லை. இவை அனைத்திற்கும் நாட்டிலுள்ள பொதுக் கல்வி தொடக்கம் பல்கலைக் கழகக் கல்வி வரையிலான சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. நாட்டிலே என்ன தொழில் பெறலாம் என்பதற்கு அப்பால் இந்த உலகத்திலே என்ன தொழில் பெறலாம் என சிந்தித்து பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு கல்விப் பணியாளர்களுக்கு உள்ளது.

இந்த உலகத்திலே தொழில் இல்லாமலில்லை. ஆனால் தொழில்களைப் பெறுவதற்கு ஏற்ற திறன்கள் ஏற்படுத்தப்பட வில்லை என்பதுதான் குற்றச்சாட்டாகவுள்ளது. ஒருவேளை நமது நாட்டின் கல்வி முறைமையில் குறைபாடாக இருந்தாலும், பாடசாலைக் கல்வி முதல் பல்கலைக் கழகக் கல்வி, தொழில் கல்வி வரைக்கும் பல புதிய நடைமுறைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.

பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள 70 பாடசாலைகளில் 40 பாடசாலைகள் இடைநிலைப் பாடசாலைகளாகவுள்ளன. 23000 மாணவர்கள் கல்வி கற்கின்ற இவ்வலையத்திலே 958 மாணவர்கள் இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி இருக்கிறார்கள். 958 மாணவர்களும், பரீட்சை எழுதிய பின்னர் ஆசிரியர்களின் கைகளிலிருந்து விடுபட்டு விட்டார்கள் என்பது அர்த்தமல்ல. அவர்கள் அனைவரும், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக கல்லூரி, கல்வியற் கல்லூரி, தொழில் நுட்பக்கல்லூரி, உள்ளிட்ட ஏதோ ஒரு துறைக்குச் செல்லும் வரை எமது கவனம் செலுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். அது எமது ஆசிரியர்களினதும், கல்வி அதிகாரிகளினதும் மிகப்பெரிய பொறுப்பாகும். இதற்காக இவ்வலயத்தில் 5 மத்திய நிலையங்களில் இந்த தொழில் வழிகாட்டல் மாநாடுகள் நடைபெறுகின்றன.

கடந்த காலங்களிலே உயர்தரம் எழுதிய மாணவர்கள் 3 வருடங்கள் கழிந்த பின்னர்தான் பல்கலைக் கழகங்களுக்குச் சென்றார்கள் தற்போது பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு அந்த நிலையை மாற்றியிருக்கிறது. கடந்த வருடத்திலே பல்கலைக் கழகங்களுக்குச் சென்றவர்கள் 30000 மாணவர்கள்தான் தேர்வு செய்யப்பட்டார்கள். 42500 மாணவர்கள் இவ்வருடம் பல்கலைக் கழகங்களுக்குத் தேர்வு செய்யப்படவுள்ளார்கள்.

உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் அனைவரும் பல்கலைக் கழகங்களுககுச் செல்ல முடியாது இலங்கையில் அதற்குரிய வசதிகளும் இல்லை, பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையும் குறைவு. அங்குள்ள வசதி வாய்ப்புக்களும் மிகவும் குறைவு. னஎ அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது மிகவும் திறமை வாய்ந்த அதிகாரிகளினால் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு, எந்த எந்த பாடங்களுக்கு எந்த பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம், பல்கலைக் கழகம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் எவ்வாறு பல்கலைக் கழகக் கல்லூரிகள், கல்வியியற் கல்லூரிகள், உயர் தொழில் நுட்பக் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பது, போன்ற பல விளக்கங்ளும், தெழிவூட்டல்களும் வழங்கி வைக்கப்பட்டன.


No comments: