News Just In

2/14/2023 04:05:00 PM

அவர் சிறந்த தலைவர்! இறுதிப் போரில் குடும்பத்தையே அர்ப்பணித்தவர் பிரபாகரன்! சரத் பொன்சேகா புகழாரம்






தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர், அவர் இறுதிப்போரில் எமது இராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டுவிட்டார் என இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகன்களான சார்ள்ஸ் அன்ரனி, பாலச்சந்திரன் மற்றும் மகள் துவாரகா ஆகியோரும் இறுதிப் போரில் உயிரிழந்துவிட்டார்கள். பிரபாகரன் குடும்பத்தில் எவரும் தப்பவில்லை. போராட்டத்தில் தனது குடும்பத்தையே அர்ப்பணித்தவராக பிரபாகரன் திகழ்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும், இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கும் பிரபாகரனின் பெயரை அடிக்கடி உச்சரிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது.

அவர்களில் ஒருவர்தான் பழ.நெடுமாறன். அவர் இறுதிப்போர் நிறைவடைந்த காலம் தொட்டு இன்று வரைக்கும் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற பொய்யான தகவலை வெளியிட்டு வருகின்றார்.

தற்போது அவர், பிரபாகரன் மட்டுமன்றி அவரின் மனைவியும், மகளும் உயிருடன் உள்ளார்கள் என்றும், மூவரும் நலமாக உள்ளார்கள் என்றும் மேலும் பொய்யான தகவலை வெளியிட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: