News Just In

12/30/2022 05:57:00 AM

மட்டக்களப்பில் மூன்று புதிய பதிவாளர்கள் நியமனம்!




மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, மண்முனை தென் எருவில் பற்று, மற்றும் போரைதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான பிறப்பு, இறப்பு மற்றும் விவாகப் பதிவாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனினால் நேற்று  (29) வழங்கப்பட்டன.

கிழக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் கே. திருவருளின் ஏற்பாட்டில் மண்டூர், நவகிரி நகர் மற்றும் ஆரையம்பதி பிரதேச பிரிவுகளுக்கான பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் மூவருக்கான நியமனக் கடிதங்கள் இதன்போது விநியோகிக்கப்பட்டன.

இம்மாவட்டத்தில் 25 பதிவாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன.

அவற்றை நிரப்பும் வகையில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட நேர்முத் தேர்வின் அடிப்படையில் இந்நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 7 பதிவாளர் நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் இன்று (29) மேலும் மூவர் பதிவாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

தம்பிராசா தயாபரன் மண்டூர் பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு பதிவாளராகவும், மண்முனை தெற்கு மற்றும் எருவில் போரைதீவுப்பற்று பிரிவின் விவாகப்பதிவாளராகவும்,

கோகிலாதேவி சுதாகரன் நவகிரி நகருக்கான பிறப்பு இறப்பு பதிவாளராகவும், மண்முனை தெற்கு மற்றும் எருவில் பற்று பிரிவிற்கான விவாகப் பதிவாளராகவும்,

கலைச் செல்வி புவிதர்ஷன் ஆரையம்பதி பிரிவின் பிறப்பு இறப்பு பதிவாளராகவும், மண்முனைப்பற்று பிரிவின் விவாகப் பதிவாளராகவும் நியமனங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்நியமனக் கடிதங்களைக் கையளிக்கும் நிகழ்வில் பதிவளர் நாயகம் திணைக்களம் சார்பாக வெளிக்களப்பிரிவிற்கான பதவிநிலை உதவியாளர் எம். றிழா, பதிவாளர் நாயக திணைக்களத்தின் கிழக்கு வலய அலுவலகத்தின் உத்தியோகத்தர்களான ஏ.எம்.ரீ. சுபராஜ், வை. சதுசியா உற்பட பதிவாளர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

No comments: