News Just In

12/24/2022 01:08:00 PM

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக சற்குணராசா தெரிவு.





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று(களுதாவளை) பிரதேச சபையின் புதிய தவிசாளராக எஸ்.சற்குணராசா வெள்ளிக்கிழமை(23) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பிரதேச சபையின் தவசாளராக பதவி வகித்து வந்த ஞா.யோகநாதன் அவர்கள் அண்மையில் சுகயீனமுற்றிருந்த நிலையில் உயிரிழந்திருந்தார். அவர் பதவி வகித்த தவிசாளர் பதவி வெற்றிடமாகியதால் புதிய தவிசாளரைத் தெரிவு செய்யும் ஒன்றுகூடல் களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது முதலில் சபை உறுப்பினர்களிடையே திறந்த வாக்களிப்பின் மூலம் தவிசாளரைத் தெரிவு செய்வதா, அல்லது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா என உள்ளுராட்சி ஆணையாளரால் கோரப்பட்டதற்கு 11 உறுப்பினர்கள் திறந்த வாக்களிப்பின் மூலம் எனவும், 10 உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்பின் மூலம் எனவும் தெரிவித்திருந்தனர். பின்னர் திறந்த முறையில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

தவிசாளருக்காக இருவரின் பெயரை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். அவ்வருவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எனதோடு, இருவரும் களுவாஞ்சிகுடி வட்டாரத்தின் இரட்டைத் தொகுதியில் அடங்குபவர்களாகும். ஒருவர் மே.வினோராஜ், மற்றவர் எஸ்.சற்குணராசா ஆகிய இருவருமாவர்.

21 பேர் கொண்ட சபை உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் எஸ்.சற்குணராசா அவர்களையும், 8 உறுப்பினர்;கள் மே.வினோராஜ் அவர்களையும் திறந்த முறையில் தெரிவு செய்தனர். 3 பேர் இருவரில் எவரையும் தெரிவு செய்யாமல் நடுநிலமை வகித்தனர். பின்னர் எஸ்.சற்குணராசா அவர்கள் மண்முனை தென் எருவில் பற்று(களுதாவளை) பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் அறிவித்தார்.

புதிய தவிசாளருக்கு சபையின் ஏனை உறுப்பினர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், முன்பிருந்த சபைத் தவிசாளருக்கு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கியதுபோல் தனக்கும் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என இதன்போது சபையின புதிய தவிசாளர் தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

புதிய தவிசாளர் தெரிவு செய்யும் கூட்ட நிகழ்வுகளைப் பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலளார் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ் உள்ளிட்ட பலர் இதன்போது வருதை தந்திருந்தனர்.


No comments: