நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அதிபர் மன்னிப்பு வழங்கியமை தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் இன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அதற்கான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஒரு வருட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். 2017 ஓகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.
அவரது கருத்து, நாட்டின் நீதித்துறை மீதான நம்பிக்கை சீர்குலைத்து விட்டது எனத் தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இதனை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு, நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையியல், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் அவருக்கான பொதுமன்னிப்பை வழங்குமாறு கோரப்பட்ட போதும் அவர் அதற்கு இணங்கவில்லை.
எனினும் ரணில் விக்ரமசிங்க அதிபரானதும் முதலாவதாக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பாக ரஞ்சனின் பொது மன்னிப்பு அமைந்தது.
எனினும் அரசியலில் ஈடுபடக்கூடாது உட்பட்ட நிபந்தனைகள் இந்த பொதுமன்னிப்பின் கீழ் விதிக்கப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.
No comments: