News Just In

7/13/2022 06:30:00 PM

அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது : சஜித் பிரேமதாஸ

இந்நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் முழு மக்களும் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளதாகவும் இந்த தருணத்தில் இருவரை பாதுகாப்பதை விடுத்து முழு நாட்டு மக்களையும் பாதுகாப்பு படையினர் பாதுகாக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்ட வன்னம் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரை வைத்து ஜனநாயகத்தை அழித்து மக்களை அடக்க அரசாங்கம் தூண்டி வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நேரத்தில் பாதுகாப்புப் படையினர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதிகார வெறி பிடித்த ஐனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான கும்பலின் ஏமாற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இனி மேலும் இந்த ஏமாற்று மோசடிக்கு இடமில்லை எனவும் தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்காக போராடும் மக்களை அடக்குமுறைக்குட்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், பாதுகாப்பு படையினர் மீது மக்கள் வைத்துள்ள மரியாதையை காப்பாற்றுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

மக்களின் அமைதியான வாழ்வுடன் விளையாடுவதை அரசாங்கம் கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், இத்தருணத்தில் மக்கள் அமைதியாகவும் ஜனநாயகத்தை மதித்தும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

No comments: