News Just In

6/14/2022 04:33:00 PM

இராணுவத்தால் காரைதீவில் பொசன் பண்டிகை மக்களுக்கு மரவள்ளி கிழங்கு துவையல் தானம்!

இராணுவத்தின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி பிரிகேடியர் சந்திரா அபேகோனின் அறிவுறுத்தலுக்கு அமைய விஜயபாகு காலாட்படை படை பிரிவு கட்டளை தளபதி லெப்டினண்ட் கேணல் தர்ஷன சிறிசேனவின் ஒழுங்கமைப்பில் காரைதீவு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பொசன் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதன் முக்கிய அம்சமாக காரைதீவு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சமில் நிசான், நிந்தவூர் முகாம் பொறுப்பதிகாரி கப்டன் கசுன் சில்வா ஆகியோரின் பகீரத முயற்சியில் இம்மாவட்டத்தை சேர்ந்த பொதுநல செயற்பாட்டாளர்களின் பங்களிப்பில் பல நூற்று கணக்கான பொதுமக்களுக்கு மரவள்ளி கிழங்கு துவையல் தானம் செய்யப்பட்டது. முகாமை அண்டி பிரதான வீதி ஓரமாக பந்தல் அமைத்து வீதியால் வந்தவர்கள், சென்றவர்கள் ஆகியோரை அழைத்து தாமரை இலையில் மரவள்ளி கிழங்கு துவையலை பரிமாறினார்கள்.

இவ்வைபவத்தில் கல்முனை ஸ்ரீ சுபத்திராராம விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரரட்ண தேரர், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம். ஏ. எம். தாஹீர் ஆகியோருடன் பங்களிப்புகள் வழங்கிய பொதுநல செயற்பாட்டாளர்களும் பேராளர்களாக கலந்து கொண்டனர். நிந்தவூர் பிரதேச சபைக்கு வருகை தர வேண்டும் என்று தேரருக்கு தவிசாளர் தாஹீர் வைபவத்தில் வைத்து அழைப்பு விடுத்தார். அத்துடன் சமயங்களால் வேறுபட்டு இருந்தாலும்கூட ஒவ்வொரு இனத்தவரின் பண்டிகைகள் போன்றவற்றில் ஏனைய இனத்தவர்கள் பங்கேற்க வேண்டும், இது புரிந்துணர்வு, நல்லிணக்கம், ஐக்கியம், சமாதானம் ஆகியவற்றுக்கு நிச்சயம் வழி வகுக்கும், பொதுநல செயற்பாட்டாளர்கள் இவ்விடயங்களில் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மரவள்ளி கிழங்கு துவையல் தானத்துக்காக 1500 கிலோ மர வள்ளி கிழங்கு கொள்வனவு செய்யப்பட்டது என்று காரைதீவு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சமில் நிசான் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.

நூருல் ஹுதா உமர்

No comments: