News Just In

6/06/2022 10:56:00 AM

விழித்திடுவோம், பாதகமான விளைவுகளை விட்டு விலகிடுவோம்!




பைஷல் இஸ்மாயில் -

நமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு சவால்களையும், சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமும் அதன் தட்டுப்பாடும், கூழித்தொழிலாளிகள் பாதிப்பு, வறுமையினால் வீட்டுச்சூழலில் பல்வேறு குடும்பப் பிரச்சினைகள், பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் போன்றவற்றுக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனைவரது வாழ்க்கையிலும் விரக்தியையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகளுக்கான தட்டுப்பாட்டின் விளைவு, இன்னும் அனைவரது வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் கையிலிருப்பிலிருக்கும் மருந்துப் பொருட்கள் முடிவடைந்தவுடன் நோயாளிகளின் நிலைமை என்னவாகும் என்பதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். இதற்கான மாற்றுவழி என்ன? அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்கும் காலம் ஏற்பட்டுள்ளது.

எமது நாட்டில் நடைமுறையிலுள்ள சுதேச வைத்திய முறைகளான ஆயுர்வேத, யுனானி, சித்த, பாரம்பரிய, வைத்திய முறைகள் பற்றி இதுவரை காலமும் எம் எண்ணத்திலிருந்து தூரமாகி இருந்ததைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டிய தரும் வந்துள்ளது. குறிப்பாக, நமது நாட்டிலுள்ள மூலப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்ற மருந்துப் பொருட்கள் மூலம் சிகிச்சை பெறுகின்றபோது, பல்வேறு வகையான நோய்களுக்கு மிகவும் வெற்றியளிக்கக்கூடிய சிகிச்சை மருத்துவ முறையாக இருக்கின்றன.

இருப்பினும், மேற்கத்தேய மருத்துவ முறையினால் கவரப்பட்டுள்ள நாமும், அதற்கு அடிமைப்பட்டுள்ள எமது உடலும் அதிலிருந்து விலகி சுதேச மருத்துவ முறையை திணிப்பதென்பது ஒரு கடினமான, கசப்பான விடயமாக இருந்தாலும் எமது நோய்களுக்கான தீர்வை, தற்போது சுதேச மருத்துவத் துறையினூடாக பெற்றுச்செல்ல வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எமது உடம்பில் ஏற்படும் காய்ச்சல், நோவுகளுக்கு பனடோல் மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கமுடையவர்களாகவும், அதனால் எமது உடலுக்குள் ஏற்படுத்தப்படும் பாதகமான விளைவுகளை அறிந்தும் அறியாதவர்கள் போன்று இதுவரை காலமும் இருந்துவிட்டோம். சுதேச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் ஊடாக அநேகமான நோய் நிலைமைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம். என்பதை நிலைநிறுத்தி இனியாவது நாம் விழித்துக் கொள்வோம்.



குறிப்பாக, மேற்கத்தைய மருந்துகளுக்கு அடிமைப்பட்டு கடைசிவரை மருந்து மாத்திரைகளை விழுங்கி வாழும் கலாச்சாரத்தை மாற்றி, நோய் நிலைமைகளின் ஆரம்பக்கட்டத்திலேயே நமது நாட்டுக்கே உரித்தான மருத்துவத்துறையை நாடிச் சென்று அதன் மூலம் கிடைக்கின்ற ஆரோக்கியத்தின் மூலம் நீண்டகால ஆயுளை நாம் எல்லோரும் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

No comments: