News Just In

3/21/2022 02:09:00 PM

சிவில் பாதுகாப்பு குழுவினால், சஹ்றானுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகள் இனங்காணப்பட்டது பெருமையளிக்கிறது. -சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்சுதீன் புகழாரம்!



நூருல் ஹுதா உமர்

சஹ்றானுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகள் சாய்ந்தமருதில் பதுங்கியிருந்தபோது; அவர்களை இனங்காட்டி, நாட்டில் இடம்பெறவிருந்த பாரிய அனர்த்தைதை தவிர்த்தது, இங்கிருந்த சிவில் பாதுகாப்பு குழுவே என்றும் அதன்காரணமாக குறித்த சிவில் பாதுகாப்புக் குழுவினர் அரசாங்கத்தால் கெளரவிக்கப்பட்டது சாய்ந்தமருதுக்குக் கிடைத்த கௌரவம் என்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் சமூக பாதுகாப்புக்குழுக்களை அமைக்கும் திட்டத்தின்கீழ் சாய்ந்தமருது 10 ஆம் 17 ஆம் பிரிவுகளுக்கான குழுக்களை அமைக்கும் செயற்பாடு, 2022.03.20 ஆம் திகதி சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில், கிராம சேவை உத்தியோகத்தர் எல்.நாஸர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்தகாலங்களில் சாய்ந்தமருதில் இருந்த சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சிறந்த முறையில் செயற்பட்டன. அதுபோன்று புதிதாக அமையவுள்ள சமூக பாதுகாப்புக் குழுக்களும் செயற்பட வேண்டும். அப்போது தான் கடந்தகாலங்களில் பெற்றதுபோன்று உயரிய கௌரவத்தை பெற்றுக்கொள்ள முடிவதுடன்; நாங்கள் எதிர்கால சந்ததிக்கு சிறந்த ஒழுக்கமான பிரதேசம் ஒன்றைக் கையளிக்க முடியும். எனவே மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் பொலிசார் தரப்பில் முடியுமான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராய் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதேசத்துக்குள் புதிதாக உட்புகுபவர்கள் விடயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடனும் அவதானமாகவும் இருக்கவேண்டும் என்றும்; தற்சமயம் ஆங்காங்கே இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதற்கும் இந்த குழுக்களின் ஒத்துழைப்பு மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் விடயத்திலும் அவைகளைக் கட்டுப்படுத்த சமூக பாதுகாப்புக் குழுக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வின்போது இரண்டு பிரிவுகளுக்குமான சமூக பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. நிகழ்வின் போது கடந்த காலங்களில் இரு கிராம சேவகர் பிரிவுகளிலும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர்களாக கடமையாற்றிய எம்.எம். உதுமா லெப்பை மற்றும் அஸீஸ் ஆகியோரும் கிராமங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகததர்களான எச்.எம். ஜே.எஸ். ஹேரத், வி.சதுர்சன் ஆகியோரும்  கிராமங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.



No comments: