புங்குடுதீவில் இருந்து சட்டவிரோதமாக பனமரக் குற்றிகள் ஏனைய பெறுமதி வாய்ந்த மரங்கள் குற்றிகளை ஏற்றிவந்த பாரவூர்தியொன்று ஊர்காவற்றுறை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. புங்குடுதீவு மடத்துவெளி பிள்ளையார் ஆலயத்திற்கருகாமையில் இன்று பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல மாதங்களாக கண்டியை சேர்ந்த ஒருவர் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த அரசியல் செல்வாக்கு கொண்ட இருவரது உதவியுடன் இந்த சட்டவிரோத செயற்பாட்டை மேற்கொள்வதாக ஊர்காவற்றுறை பொலிசாருக்கும் துறைசார் தரப்பினருக்கும் தகவல் தெரிவித்தும் அத்தரப்பினரால் குறித்த தரப்பினருடன் கொண்டுள்ள நெருக்கம் காரணமாக எதுவித சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படாதிருந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் பொலிஸ் உயரதிகாரியின் தலையீட்டை அடுத்து பனைமரக் குற்றிகளை ஏற்றிய பாரவூர்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: பிரதேச செயலகத்தில் வெட்டிச் சீவிய 45 மரங்களை கொண்டு செல்வதற்காக அனுமதி பெறப்பட்டுள்ளபோதிலும் பனை மரம் மற்றும் ஏனைய பெறுமதி வாய்ந்த மரங்களின் குற்றிகள் உள்ளிட்ட 450 மேற்பட்ட மரத்துண்டுகள் குறித்த பாரவூர்தியில் இருந்ததாகவும் இவை அனைத்தும் பட்ட மரங்கள் என்ற போர்வையில் உயிருள்ள பச்சை மரங்களை சட்டவிரோதமாக வெட்டியே குறித்த குழு புங்குடுதீவில் இருந்து கடத்தி வருவதாகவும் இதை வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரது தயவுடன் அவரது நெருங்கிய நண்பர் ஒருவரே மேற்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
முன்பதாக இவ்விடயம் தொடர்பில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது உறவுக்காரரும் அப்பகுதி இளைஞர்களுடன் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி அது மோதலாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இன்றைய தினம் ஜே/26 கிராம உத்தியோகத்தர் மற்றும் அப்பகுதியின் பொருளாதார உத்தியோகத்தர் ஆகியோரது உறுதிப்படுத்தலில் 45 சீவிய பனைமர துண்டங்களை எடுத்து செல்ல அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிகளவான மரங்களை ஏற்றிச் செல்ல முற்பட்ட சமயம் ஊர்காவற்றுறை பொலிஸார் நடவடிக்கை எடுக்க தயங்கிய நிலையில் அவ்வூர் இளைஞர்களின் முயற்சியால் யாழ் பொலிஸ் உயரதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரது தலையீட்டை அடுத்து இன்றைய தினம் ஊர்காவற்றுறை பொலிசார் நடவடிக்கை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: