மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சந்திவெளி பொலிஸ் நிலையத்தில் மதுப் பாவனை காரணமாக ஏற்படும் குடும்பப் பிரச்சினை சம்பந்தமான முறைப்பாடுகள் அதிகம் பதிவாவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சந்திவெளி பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை 28.10.2021 புதிய பொலிஸ் நிலையம் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா வினால் திறந்து வைக்கப்பட்டது.
அன்றிலிருந்து அடுத்து வந்த இரு தினங்களில் 31.10.2021 வரை சிறு குற்றங்கள் மற்றும் குடும்ப வன்முறைகள் குடும்பத் தகராறுகள் விடமயாக 18 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் கசிப்பு காய்ச்சுதல் விற்றல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று முறைப்பாடுகளுக்கமைவாக மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
30 பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சேவையைத் தொடங்கியுள்ள புதிய சந்திவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக எம். சுதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தினால் சேவையாற்றப்பட்டு வந்த நிலையில் சந்திவெளி என பிரிக்கப்பட்டுள்ள புதிய பொலிஸ் நிலைய பிரதேசம் 12 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 33 ஆயிரம் மக்களுக்கு சேவை வழங்கி வருவதாக என்று ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ கே. ஜயந்த தெரிவித்தார்.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: