சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 'கழிவு உரத்தை' எமது நாட்டில் தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டுவதற்கான இடம் இதுவல்ல. சீனா எந்தளவிற்குப் பலம்பொருந்திய நாடாக இருந்தாலும், அவர்களின் தேவைக்கேற்றவாறு செயற்படுவதற்கு நாங்கள் தயாரில்லை.
இலங்கையில் இருப்பவர்களை 'விசித்திரமான விலங்குகள்' என்றே சீனத்தூதுவர் நினைத்துக்கொண்டிருக்கின்றார். எமது நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம் என்பதை அவர் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆகவே 'கழிவு உரம்' அடங்கிய கப்பலை அவரது நாட்டிற்கே திருப்பியனுப்புமாறு சீனத்தூதுவரிடம் வலியுறுத்த விரும்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் செவ்வாய்கிழமை (9 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
No comments: