News Just In

10/31/2021 07:01:00 PM

உற்பத்திசார் திறனை வலுப்படுத்தும் முகமாக தம்பலகாமம் பிரதேச செயலாளர் சகிதம் பத்தினிபுர உற்பத்தியாளர்கள் முல்லைத்தீவிற்கு விஜயம்!

திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் கிராமம் உற்பத்தி கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவசியமான உதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளன. இவர்களது உற்பத்தி முயற்சிகளை மேலும் வினைத்திறனாக மேற்கொள்ளும் வகையில் (29) பத்தினிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பயனாளிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான வெளிக்கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இதன் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் சிறப்பான முறையில் உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற பிரதேசங்களுக்குச் சென்று அவர்களுடைய அனுபவங்களை கேட்டறிந்து கொண்டனர். உற்பத்திச் செயற்பாடுகளை மேற்கொள்கின்ற முறைமை, சந்தைப்படுத்தல் செயற்பாடு உட்பட பல விடயங்கள் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

இவ்வாறான வெளிக்கள விஜயத்தின் மூலம் நேரடியாக உற்பத்திசார் விடயங்களை பார்வையிடலால் கூடிய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று இதன் போது கலந்துகொண்ட பயனாளிகள் தெரிவித்தனர்.

இவ்விஜயத்தில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகெளரி சிறீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், அதிகாரிகள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.





No comments: