News Just In

6/14/2021 03:56:00 PM

திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 16பேர் தனிமைப்படுத்தலில்...!!


நாடுபூராகவும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குருநகர் பகுதியில் யாழ்ப்பாண காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது, திருமண நிகழ்வொன்றில் அனுமதிக்கப்பட்ட விருந்தினர் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பலர் நிகழ்வில் கூடியதையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 15 பேருக்கு உட்பட்டு திருமணப் பதிவை மேற்கொள்ள முடியும் என சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அனுமதிக்கப்படும் தொகைக்கு மேலதிகமாக பலர் ஒன்று கூடியதாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்தனர்.

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வடமராட்சி , கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அமைந்துள்ள மணப்பெண் வீட்டில் சுகாதார பிரிவின் அனுமதியின்றி இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மணமகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மணப்பெண் வீட்டிற்கு சென்று திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் இரு வீட்டாருமாக 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து குறித்த வீட்டுக்கு சென்றபோது, திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களில் பலர் தப்பியோடியுள்ளனர். எனினும், சிலரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

அத்துடன் படப்பிடிப்பாளர்களிடம் இருந்த புகைப்படம் மற்றும் காணொளிகளை பெற்று நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையோரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: