News Just In

1/31/2021 09:00:00 PM

சன நெருசல் நிறைந்த இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோத வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், அவை முற்றாகத்தடை செய்யப்பட வேண்டும்- ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவித்தவிசாளர்!!


எஸ்.எம்.எம்.முர்ஷித்
எமது பிரதேசங்களில் சன நெருசல் நிறைந்த இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோத வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், அவை முற்றாகத்தடை செய்யப்பட வேண்டுமென ஓட்டமாவடி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை தெரிவித்துள்ளார்.

இது விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,

மிகவும் சனநெரிசலான வீதிகளை அபகரித்து வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதன் காரணமாக பாதசாரிகளுக்கும் பொது மக்களுக்கும் பொதுப்போக்குவரத்துக்கும் இடைஞ்சலாகக் காணப்படுவதுடன், வீதி விபத்துக்கள் இடம்பெறவும் வழி வகுக்கின்றன.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வீதிகளை அபகரித்து இடம்பெற்று வரும் வியாபார நடவடிக்கைகள் காரணமாக சனநெரிசல் நிறைந்த வீதிகளில் தினமும் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன், பாடசாலை மாணவர்கள், அரச ஊழியர்கள், பொது மக்களும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறான விபத்துக்களினால் பலர் அவயவங்களை இழந்து நீண்டகால நோயாளிகளாக அவதியுறும் நிலையும் அதன் காரணமாக அவர்களது குடும்பமும் சுமைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளிக்கும் நிலையும் காணப்படுகின்றது.

அத்துடன், சபையின் அனுமதியின்றி இவ்வாறான நடவடிக்கைகள் எம்.பி.சீ.எஸ்.வீதி, மீராவோடை, ஹுதா பள்ளிவாயல் வீதி போன்ற பொருத்தமில்லாத இடங்களில் இடம்பெறுவதன் காரணமாக சரியான ஒழுங்குபடுத்தல்கள் ஏதுமில்லாத நிலை காணப்படுவதுடன், பொது மக்களுக்கும் வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் இடங்களைச் சுற்றியுள்ளோருக்கும் அசெளகரியங்கள் ஏற்படும் நிலையும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

தனிமனித நலனுக்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது.

இது விடயம் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, இவ்வாறு அனுமதியில்லாமல், பொருத்தமில்லாத இடங்களில் இடம்பெறும் வியாபார நடவடிக்கைள் தொடர்பில் சபை கவனஞ்செலுத்தி அவற்றை முற்றாக்கத்தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், அவ்வாறான வியாபாரிகளுக்கு மாற்று வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டால், பாதையில் பயணிக்கும் பாதசாரிகள், வயோதிபர்கள், மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் ஏனையோருக்கும் நன்மை பயக்கும் என மேலும் தெரிவித்தார்.




No comments: