News Just In

6/28/2020 09:11:00 AM

மட்டக்களப்பில் அத்துமீறி முகத்துவாரம் வெட்டிய அம்பாறை வேட்பாளர் உட்பட 33 பேருக்கு பிணை

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கைதான வேட்பாளர் உட்பட 33 பேர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை(27) மாலை இடம்பெற்றதுடன் சம்பவம் தொடர்பாக அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுன வேட்பாளர் ஒருவர் உட்பட 33 பேரை கைது செய்ததுடன் 3 வாகனங்கள் மற்றும் மண்வெட்டிகளை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வேட்பாளர் தலைமையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்த 33ற்கு மேற்பட்டவர்களால் இவ் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டிருந்தது.

இதன் போது குறிப்பிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கண்ணுற்ற அப்பகுதி பொதுமக்கள் சம்பவத்தை உடனடியாக பொலிசாரின் கவனத்திற்கும் இராணுவத்தினரின் கவனத்திற்கும் கொண்டுவந்ததையடுத்து சந்தேக நபர்கள் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யபட்டனர்.

மேலும் குறிப்பிட்ட சட்டவிரோத செயற்பாடு தொடர்பாக மாநகர முதல்லர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு 9.30 மணியளவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட விவசாயிகள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் முறையிட்டு முகத்துவாரம் ஆற்றுவாயினை வெட்டிவிடுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கரவாகுப்பற்று நற்பிட்டிமுனை மற்றும் கிட்டங்கி நாவிதன்வெளி விவசாயிகளின் தாழ்நில விவசாயகாணிகள் முழுமையாக வெள்ளத்தினால் கிட்டத்தட்ட ஐயாயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் முறையிட்டிருந்தனர்.இது தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் பேசியதன் அடிப்படையில் நேற்று(27) ஆற்றுவாய் வெட்டும் தீர்மானிக்கும் மாவட்ட செயலணி அவசரமாக கூட்டி தீர்மானம் எடுக்கவேண்டிய தேவையின் அடிப்படையில் கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றிருந்தது.

மேலும் இவ்வாறானதொரு செயற்பாடு கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்று எமது மாவட்டம் கடும் வரட்சியை எதிர்கொண்டு குடிநீர் முழுமையாக மக்களுக்கு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டமையும் குறிப்பிட்ட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. நீர் வடிந்தோடுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாக காணப்படுவது துறைசார் திணைக்களத் தலைவர்கள் அங்கு குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த செய்தியை அறிந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 50ற்கு மேற்பட்ட நபர்கள் இரவோடு இரவாக வாகனத்தில் வந்து வாகனங்கனை மயிலம்பாவெளிப்பகுதியில் நிறுத்தி விட்டு சகலரும் நடந்து வந்து அவசரமாக ஆற்றுவாயினை வெட்டியுள்ளனர். இதனை கண்ணுற்ற பிரதேச பொதுமக்களின் உதவியுடன் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது்.

தற்போது குறிப்பிட்ட பகுதியில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக இருவாரங்களுக்கு இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என மாவட்ட பிரிகேடியர் தெரிவித்துள்ளார்.

திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீ லங்கா பெரமுனை கட்சியின் 2 ம் இலக்க வேட்பாளர் கீர்த்தி ஸ்ரீ விஜயசிங்க தலைமையிலான குழுவினரே இவ் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இந்த முகத்துவாரம் வெட்டுவதானால் கமநல சேவைகள், மற்றும் நீர்ப்பாசன சேவைகள் திணைக்களம், அரசாங்க அதிபர் ஆகியோரின் அனுமதியுடன் அதனை வெட்டவேண்டும் இருந்தபோதும் அதனையும் மீறி சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ள மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாயை வெட்டினால் மட்டக்களப்பு ஆற்றிலுள்ள மீன்கள் இல்லாமல் போகும் மற்றும் கிணறுகளில் நீர் இல்லாமல் போகும், போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும் .எனவே இந்த ஆற்றுவாயை வெட்டமுடியாது அதேவேளை அம்பாறை மாவட்டதிலுள்ள அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம், தம்பட்டை, முகத்துவாரம், ஒலுவில் முகத்துவாரம் போன்றவற்றின் ஆற்றுவாயை வெட்டமுடியும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி 







No comments: