பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகும் வரை, புதிதாக அரசாங்க வேலைவாய்ப்புக்கு நியமனம் பெற்ற பட்டதாரிகளுக்கான இரண்டு மாதகால தலைமைத்துவப் பயிற்சிகளை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுநிர்வாக பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த நியமனங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவோ அல்லது நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காகவோ நியமிக்கப்படவில்லை எனவும் குறித்த நியமனங்கள் தொடர்பில் தனக்கு எழுத்து மூலம் பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும், கடந்த தேர்தல் காலத்திலும் இதுபோன்ற பல நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விடயங்களை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதில் கடிதம் எழுதியுள்ள பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாரச்சி,
தேர்தலை இலக்கு வைத்து இந்நியமனங்கள் வழங்கப்படவில்லை எனவும் இவை தேர்தல் வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பட்டதாரிகளுக்கு வழங்கிய குறித்த நியமங்கள் தேர்தலை பாதிக்குமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கருதினால், தேர்தல் முடிவடையும்வரை தற்காலிகமாக இந்நியமனங்களை இடைநிறுத்தி வைக்க முடியுமென்றும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments: