ஏ.எச்.ஏ. ஹுஸைன்
காட்டு யானையிடமிருந்து தப்பிக்க ஓடியவரின் சடலம் 3 நாட்களின் பின்னர் காட்டிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவு கொம்மாதுறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சுரேந்திரன் (வயது 38) என்பவரின் சடலமே செவ்வாய்க்கிழமை 11.02.2020 மாலை மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று மோட்டார் சைக்கிளில் நண்பர்களாக வயல்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அன்றைய தினம் மாலை தரவை பகுதியில் இருந்து அவர்கள் திரும்பி வரும்போது காட்டு யானை வழிமறித்துள்ளது. நண்பரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த சுரேந்திரன், வழிமறித்த காட்டு யானையிடமிருந்து தப்பிக்க மோட்டார் சைக்கிளிலில் இருந்து குதித்து காட்டுக்குள் ஓடியுள்ளார்.
அவரோடு பயணம் செய்தவர்களும் காட்டு யானையிடமிருந்து தப்பிக்க திசை தடுமாறி சிதறி ஓடியுள்ளனர்.
எனினும், மற்றையவர்கள் ஒரு படியாக தத்தமது வீடுகளுக்குத் திரும்பிய நிலையில் சுரேந்திரன் மாத்திரம் வீடு திரும்பவில்லை.
தொடர்ந்து அந்தக் காட்டுப் பகுதியில் இரண்டு நாட்கள் இடம்பெற்ற தேடுதலில் இரு கால்களும் முறிந்த நிலையில் அவர் காட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
உடற் கூறாய்வுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு செவ்வாலய்க்கிழமை மாலை கொம்மாதுறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments: