News Just In

12/25/2019 09:10:00 AM

மட்டக்களப்பில் மழை ஓய்ந்து வெள்ளம் வடிவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்புகிறது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு வடகீழ்ப் பருவ பெயர்ச்சிக் காலநிலையின்போது சமீப நாட்களில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப்பெருக்கு என்பனவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது பெருமழை ஓய்ந்து வெள்ளமும் வடிந்து கொண்டிருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

மக்களின் பாதிப்பின் தன்மை, இயல்பு வாழ்க்கை என்பனவற்றை அறிந்து கொள்வதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மாவட்ட இடர் முகாமைத்து நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம். சியாத் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை 24.12.2019 கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

கரவெட்டியாறு, கரடியனாறு, ஆயித்தியமலை, உன்னிச்சை போன்ற பகுதிகளுக்குச் சென்று அதிகாரிகள் நிலைமைகளை அவதானித்தனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடைத் தங்கல் நலன்புரி நிலையங்களில் தங்கியவர்களும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தவர்களும் படிப்படியாக தமது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருட வடகீழ்ப் பருவ பெயர்ச்சிக் காலநிலையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட வெள்ளத்தில் மொத்தம் 6287 குடும்பங்களைச்  சேர்ந்த 21104 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக  இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிவரம் தெரிவிப்பதாக மாவட்ட தகவல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments: