இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கும் தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.
சுதந்திர தின நிகழ்வு தொடர்பாக அரச நிர்வாக அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
அத்துடன் சுதந்திர தினத்தில் இடம்பெற ஏற்பாடாகி இருக்கும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் வேறு நிகழ்வுகளை ஒத்திகை பார்க்கும்போது, மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாதவகையில் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேடமாக சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின்போது 2016ஆம் ஆண்டிலே முதல் தடவையாகத் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 3வருடங்கள் (2019வரை) தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இணையாக நாடு பூராகவும் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டம் ஒன்றையும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments: