News Just In

10/17/2019 10:29:00 AM

யாழ் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இன்று காலை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

இன்றைய தினம் இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் உத்தியோகபூர்வமாக பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 10.00 மணிக்கு தரையிறங்கவுள்ளது. இந்த விமானத்தில் இந்திய சிவில் விமான சேவை அதிகாரிகள் வரவுள்ளனர்.

இந்த விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக 2,250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபாவையும், இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவையும் வழங்கியுள்ளது.

3 கட்டங்களின் கீழ் இந்த விமான சேவை அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதல் கட்டத்தின் கீழ் 950 மீற்றர் விமான ஓடு பாதை நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 72 இற்கு குறைவான Bombardier – 100 ரக விமானங்களை பலாலி விமான நிலையத்தினால் கையாளக்கூடியதாக அமைந்திருக்கும்.

பாலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் 5 சர்வதேச விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அடுத்த மாதம் (நவம்பர்) முதலாம் திகதி இந்த விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபை நேற்று தெரிவித்தது.

ஏற்கனவே இந்த விமான சேவை இம் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது இந்த விமான சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று அதிகார சபையின் அதிகாரி நேற்று தெரிவித்தார்.

இந்தியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானங்களே இந்த சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. முதலில் பலாலியில் இருந்து சென்னைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இந்த நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வாரத்தில் 3 நாட்களுக்கு பலாலிக்கும் சென்னைக்கும் இடையில் இந்த விமான சேவை இடம்பெறும். தேவைகளின் அடிப்படையில் விமான சேவைகளை விஸ்தரிப்பதற்கும் அந்த நிறுவனம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விமான நிலையம் வடக்கில் ஆரம்பமாவதை அடுத்து அந்த பிரதேசம் மேலும் அபிவிருத்தியடையக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இதே போன்று இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதுடன் மறைமுகமான தொழில் வாய்ப்புக்கள் உருவாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments: