பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் உடல்நலக்குறைவால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் இன்று தனது 69ஆவது வயதில் காலமானார்.
கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் கடந்த 1950ம் ஆண்டு கத்ரி கோபால்நாத் பிறந்தார். இசைக்குடும்பத்தில் பிறந்த இவருக்கு, மேலைநாட்டு இசைக் கருவியான சாக்சபோன் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது. அதனை கற்று, இசைக் கலையில் உச்சம் தொட்டார் கத்ரி கோபால்நாத்.
இயக்குநர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான டூயட் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து கத்ரி கோபால்நாத் பணியாற்றினார். இப்படத்தில் நடிகர் பிரபு சாக்சபோன் இசைக் கலைஞராக நடித்துள்ளார். அப்படத்தின் அனைத்து பாடல்களிலும் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டதையடுத்து, கத்ரிகோபால்நாத் வெகுஜன மக்களிடமும் பிரபலமடைந்தார்.
தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப்பெற்ற இவர், உடல்நலக்குறைவால் மங்களூருவில் காலமானார். இதனையடுத்து கர்நாடகாவின் பாதவிங்கடி என்ற இடத்தில் கத்ரி கோபால்நாத்தின் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.

No comments: