News Just In

7/16/2026 07:09:00 AM

ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்.. பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்.. பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்



குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கார் தீப்பற்றிய சம்பவத்திற்கும், அங்கிருந்த 8 வயது சிறுவனுக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளி குறித்து இலங்கை பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த சிறுவன் காரை தீயிட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 3ஆம் திகதி குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு அங்கு நின்ற 8 வயது சிறுவனே காரணம் என முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து, குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவன் என்பதும், சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் அந்த காரின் அருகே நடந்து சென்றதும் பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த சிறுவன் தான் காரைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்பதற்கான எந்தவொரு நேரில் கண்ட சாட்சியங்களோ அல்லது தடயவியல் ஆதாரங்களோ இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments: