(நூருல் ஹுதா உமர்)
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம் (ICMPD) ஆகியவற்றின் ஏற்பாட்டில், "இடம்பெயர்வு தகவல் மையம்" (Migration Information Centre - MIC) ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பான மற்றும் சட்ட ரீதியான புலம்பெயர்வு தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இன்று மருதமுனையில் நடைபெற்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பான புலம்பெயர்வு நடைமுறைகள், சட்டபூர்வமான வேலைவாய்ப்பு வழிமுறைகள், மனிதக் கடத்தல் மற்றும் சட்டவிரோத இடம்பெயர்வினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வால்ட் (Dr. Siri Walt) கலந்து கொண்டார். அவருடன் தூதரக உயரதிகாரிகள் பங்கேற்றனர். புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவன இலங்கைக்கான இணைப்பாளர் சாமீர் ஸாலிஹ், புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவன இலங்கைக்கான அதிகாரிகளான சுமித்ரா சதாசிவம், சரத் பல்லேகம ஆகியோரும் கலந்து கொண்டு புலம்பெயர்வு தொடர்பிலான விடயங்களை தெளிவுபடுத்தினர்.
இதன்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், தொழிலாளர் உரிமைகள், வெளிநாடுகளில் பணிபுரியும் போது கிடைக்கக்கூடிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் அவசர காலங்களில் தொடர்புகொள்ளக்கூடிய சேவைகள் தொடர்பிலும் விரிவான விளக்கங்களை வழங்கினர்.
மேலும், Migration Information Centre (MIC) ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் தகவல் மற்றும் ஆலோசனை சேவைகள், தொழில்முறை வழிகாட்டல்கள், சட்ட ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வுக்கான ஆதரவு நடவடிக்கைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.
பாதுகாப்பான மற்றும் சட்ட ரீதியான புலம்பெயர்வை ஊக்குவிப்பதன் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் நலன் மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவதோடு, மனிதக் கடத்தல் மற்றும் மோசடி நடவடிக்கைகளை குறைப்பதற்கும் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வால்ட், உலகளாவிய ரீதியில் இடம்பெயர்வு ஒரு முக்கிய சமூக மற்றும் பொருளாதார விடயமாக மாறியுள்ள நிலையில், பாதுகாப்பான, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட மற்றும் சட்டபூர்வமான புலம்பெயர்வு முறைகள் மிகவும் அவசியமானவை என வலியுறுத்தினார். குறிப்பாக வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் உரிய நிறுவனங்களின் ஊடாக மட்டுமே பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தவறான முகவர்கள் மற்றும் சட்டவிரோத வலையமைப்புகளிடம் சிக்காமல் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
No comments: