.jpg)
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் நடைமுறையை நிராகரிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு இன்று கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் விசேட ஏற்பாடு குறித்து அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்குத் தனது கடும் மறுப்பைத் தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
இராணுவத் தலையீடு அற்ற வகையில் ஜனநாயக நிருவாகத்தின் கீழ் பின்வரும் வழிமுறைகளை அவர் முன்மொழிந்துள்ளார்.
இராணுவத் தலையீடற்ற, ஒரு ஜனநாயக நிருவாகத்தின் கீழ் எரிபொருள் விநியோகம் அமைய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் சாதாரண எரிபொருள் நிரப்பு நிலையங்களிலேயே விரைவுக்குறி (QR Code) முறைமை ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டை வழங்க அனுமதித்தல்.
உறுப்பினர்கள் தத்தமது சொந்த மாவட்டங்களுக்குள்ளேயே எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வசதியை உறுதி செய்தல்.
இராணுவத் தலையீடு இன்றி, இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) அல்லது ஏனைய அரச நிறுவனங்கள் ஊடாக விநியோகத்தை மேற்கொள்ளல்.
பல்வேறு சமூகங்களின் உணர்வுகளையும் மதிக்கின்ற, நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு மாற்று வழிமுறையை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்
No comments: