சுமந்திரன் மீது கஜேந்திரகுமார் பகிரங்கக் குற்றச்சாட்டு

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக தமிழ்க் கட்சிகளை ஓரணியில் திரட்டும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முயற்சியைத் தடுக்கும் நோக்கம் எமக்கில்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைத் தெளிவுபடுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "தமிழ்த் தேசியப் பேரவை எதிர்வரும் 15ஆம் திகதி சிவில் அமைப்புகளுடன் நடத்தவுள்ள சந்திப்பால், சுவிஸ் தூதரகத்தின் 19ஆம் திகதி முயற்சி கைவிடப்பட்டதா என நான் தூதரகத்திடம் வினவினேன்.
ஆனால், சந்திப்பு குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதால் அதன் இரகசியத் தன்மை பாதிக்கப்படலாம் எனக் கருதியே தமிழ்க் கட்சிகள் தரப்பில் தயக்கம் காட்டப்பட்டதே தவிர, இதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனத் தூதரகம் விளக்கமளித்துள்ளது.
எனது கோரிக்கையின் பேரிலேயே சுவிஸ் தூதரகம் இந்த முயற்சியை முன்னெடுப்பதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது.
உண்மையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கேட்டுக்கொண்டமைக்கு இணங்கவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
15ஆம் திகதி நாம் நடத்தவுள்ள சந்திப்பைக் குழப்புவதற்காகவே தமிழரசுக் கட்சியினர் இத்தகைய வதந்திகளைப் பரப்புவதாக நான் சந்தேகிக்கின்றேன்.
ஏக்கிய இராச்சிய அரசமைப்புச் சதி
அரசு தற்போது 'ஏக்கிய இராச்சிய' (ஒற்றையாட்சி) அரசமைப்பைத் தமிழர்களுக்குத் தீர்வாகத் திணிக்க முயன்று வருகின்றது. நாடாளுமன்றத்தில் அவர்களுக்குள்ள பலத்தைப் பயன்படுத்தி இதனை நிறைவேற்ற முடியும்.
இந்தச் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் நின்று பலமான தீர்மானத்தை எடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது.
நாம் 2024ஆம் ஆண்டிலிருந்தே இந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். 19ஆம் திகதி சந்திப்பில் பங்கேற்கத் தயாராக இருக்கும் தமிழரசுக் கட்சியினரால், ஏன் 15ஆம் திகதி சிவில் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் கலந்துகொள்ள முடியாது?
2029ஆம் ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. தமிழர்களின் ஆதரவுடன் ஒற்றையாட்சி அரசமைப்பு ஏற்கப்பட்டால், அதன் பின்னர் தமிழர்களுக்கு இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாகச் சர்வதேசத்திடம் முறையிடக்கூட முடியாத நிலை ஏற்படும்.
இந்தச் சதியை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்." என்றார்
No comments: