News Just In

12/12/2025 08:53:00 AM

வடகிழக்கு மாகாணங்களில் குளிரான வானிலை தொடரும்; வயதானவர்கள், குழந்தைகள் அவதானம்


வடகிழக்கு மாகாணங்களில் குளிரான வானிலை தொடரும்; வயதானவர்கள், குழந்தைகள் அவதானம்



இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய காற்றுச் சுழற்சி வலுவிழந்தது. ஆனால் இலங்கையின் தென்மேற்கு பகுதியைக் கொண்டு நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நா.பிரதீபராஜா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்

அவரது பதிவில் மேலும் தெரிவிக்கையில்
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கிடைத்து வரும் மழை நாளை 13 ஆம் திகதி வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் நாளை வரை கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு அனர்த்தம் நிகழ்வதற்கும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த நிலச்சரிவு நிகழ்வுகள் தொடர்பாக மக்கள் தொடர்ந்தும் அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளினதும் வளிமண்டலத்தில் ஈரப்பதன் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல இடங்களிலும் குளிரான வானிலை நிலவுகிறது. உணரக்கூடிய வெப்பநிலையும் குறைவாகவே உள்ளது. இது மேலும் சில நாட்களுக்கு தொடரும் வாய்ப்புள்ளது. எனவே குளிரான வானிலை தொடர்பான உணர்திறன் அதிகமுள்ளவர்கள் குறிப்பாக , வயதானவர்கள், நோயாளிகள் குழந்தைகள் அவதானமாக இருப்பது சிறந்தது.

வெப்பநிலை அளவுகளில் நிலவும் சுவாரசியமான நிலைமை காணப்படுகின்றது. கடந்த சில நாட்களாக இரத்தினபுரி மாவட்டம் அதிகூடிய வெப்பநிலையை( சராசரியாக 31.5°C) பெறும் அதேவேளை நுவரெலியா அதிகுறைந்த வெப்பநிலையை(சராசரியாக 16°C) இனைப் பெறுகின்றது. இரண்டு பிரதேசமும் மிகப்பெரிய அளவு தூர இடைவெளியில் இல்லை. ஆனால் உயர வேறுபாடே மிகப்பெரிய வெப்பநிலை வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.

அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வாகவே காணப்படுகின்றது.இது சராசரியாக 28°C என்ற அளவில் காணப்படுகின்றது. பொதுவாக கடல் மேற்பரப்பு வெப்பநிலை 27°C இனை விட உயர்வாக இருந்தாலே கடலில் காற்றுச் சுழற்சிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி அன்று வங்காள விரிகுடாவில் புதிய ஒரு காற்றுச் சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை அடுத்த சில நாட்களுக்கு பின்பே உறுதிப்படுத்த முடியும்.

எவ்வாறாயினும் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றார்





No comments: