நாளை முதல் பாடசாலை நேரங்களில் முற்றிலும் தடை

பாடசாலை நேரங்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், நாளை (8) முதல் பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் காலை 7.45 மணி வரையிலும் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாகத் தடை செய்யப்படும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் வீதியோரத்தில் முறையாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விழிப்புணர்வு நாட்டில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கடந்த 4 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
No comments: