களத்தில் வன்மத்தை காட்டிய பாகிஸ்தான் வீரர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரரான சாஹிப்ஸதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இறுதிக்கட்டத்தில் பஹீம் அஷ்ஃரப் 8 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்திருந்தது. 172 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி அபிஷேக் சர்மா 39 பந்துகளில் (5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசிய 74 ரன்கள் மற்றும் ஷுப்மன் கில் 28 பந்துகளில் சேர்த்த 47 (8 பவுண்டரிகள்) ரன்கள் உதவியுடன் 18.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா, ஷுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்து மிரட்டியியிருந்தது.
லீக் சுற்றை போன்று இந்த ஆட்டத்திலும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸின் போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவுடன் கைகுலுக்கவில்லை. மேலும் போட்டி முடிவடைந்த பின்னரும் இரு அணிகளும் கைகுலுக்கும் சம்பிரதாயங்களும் நிகழவில்லை. இது ஒருபுறம் இருக்க இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சர்ச்சைக்குரிய மற்றும் அரசியல் ரீதியாக நோக்கம் கொண்ட சைகைகளைச் செய்தனர். சாஹிப்ஸதா ஃபர்ஹான் அரை சதம் அடித்ததும் தனது மட்டையை துப்பாக்கி போன்று வைத்து ரசிகர்களை நோக்கி சுடுவதை போன்று கொண்டாடினார். இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டன. சாஹிப்ஸதா ஃபர்ஹானின் செயல் விளையாட்டு அறத்தையும், மாண்பையும் சீர்குலைக்கும் வகையில் இருந்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டினர்
No comments: