
தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி (Sunil Senevi) தெரிவித்துள்ளார்.
அத்துடன், தையிட்டி விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,“ நாட்டில் அமைந்துள்ள எந்த மதத் தலங்களையும் அகற்ற முடியாது. அது மத ரீதியான, இன ரீதியான வன்முறைகளுக்கே வழிவகுக்கும்.
மதத் தலங்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதை கட்சிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர் ஏற்கனவே நேரில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அவர்கள் இணக்கமான தீர்வுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளார்கள். பலர் மாற்றுக் காணிக்குச் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், காணி உரிமையாளர்களைத் திசை திருப்பி அவர்களைத் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குப் பயன்படுத்தச் சிலர் முற்படுகின்றனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.
No comments: