News Just In

12/30/2024 04:33:00 PM

நீக்கப்பட்டுள்ள இராணுவ அரண்கள் : அநுரவின் பாதுகாப்பு தொடர்பில் அம்பிட்டியவின் கடுமையான எச்சரிக்கை!

நீக்கப்பட்டுள்ள இராணுவ அரண்கள் : அநுரவின் பாதுகாப்பு தொடர்பில் அம்பிட்டியவின் கடுமையான எச்சரிக்கை



வடக்கு, கிழக்கில் உள்ள சில இராணுவப் பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன என்றாலும் இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி சூழ்ச்சி நடக்கலாம் என அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது "மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில்தான் நந்திக் கடலில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனால் சர்வதேச ரீதியில் அவர் எதிர்கொண்ட அழுத்தங்கள் ஏராளம். போர் இவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும் எமது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் சம்பவம்கூட இதன் ஓர் அங்கம்தான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் மகிந்தவுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்று எவராலும் கூற முடியாது.
எனவே, மகிந்தவைப் பாதுகாக்க வேண்டியது எமது இனத்தின் கடப்பாடாகும்.

76 ஆண்டு கால சாபத்துக்கு முடிவுகட்டத்தான் அநுரவை ஜனாதிபதியாக்கினார்கள். எனவே, அவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி மாளிகை பகுதிகளில் உள்ள வீதிகளில் இருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டதன் நோக்கம் என்ன? யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இருந்த இராணுவப் பாதுகாப்பு அரண்கள் நீக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்தி சூழ்ச்சி செய்கின்றனரா என்பது பற்றி பாதுகாப்புத் தரப்பினர் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஏனெனில் புலிகள் காடு மாறினாலும் அதன் உடலில் உள்ள புள்ளிகள் மாறாது என்பார்கள்.

ஜனாதிபதி செயலக வீதிகளைத் திறக்க முடியும் என்றால், திவுலபத்தான வீதியை ஏன் திறக்க முடியாது"என்றும் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments: