(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பில் அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான செயலமர்வு கல்லடி தனியார் விடுதியில் புதனன்று (4) இடம்பெற்றது.
சேர்ற் (CERT) நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திலின திஸாநாயக்க தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பொது நிர்வாக அமைச்சும், இலங்கை சேர்ற் நிறுவனமும் இணைந்து அரச நிறுவனங்களில் கடமையாற்றும் அலுவலர்களுக்கான தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு கொள்கைகள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கின.
இலங்கை தேசிய இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணினி அவரச தயார்நிலைக் குழுவாக சேர்ற் நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
அடுத்த வருடம் அரச நிறுவனங்களில் நவீன டிஜிற்றல் மயமாக்கலின் உதவியுடன் புதிய செயலிகள் மூலம் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் நம்பகமான இணைய பாதுகாப்புச் சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்க முடியும் என நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் துறைசார் உத்தியோகத்தர்களுக்கு தகவல் பாதுகாப்பு தொடர்பான அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு எதிர்காலத்தில் செயலமர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி சிறிகாந்த், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் துறைசார் நிபுணர்கள் என பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments: