News Just In

6/10/2024 11:26:00 PM

கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டது துரதிர்ஷ்டம் என்கிறார் ஹரீஸ் எம்பி!




நூருல் ஹுதா உமர்

கல்விசார் நியமனங்களிலும், கல்வி அதிகாரிகள் நியமனங்களிலும் பல பாரபட்சங்கள் இடம்பெறுவதாக அறிகிறோம். இது போன்று பல இடங்களிலும் பல்வேறு அசௌகரியங்கள், பாரபட்சங்கள் இடம்பெறுகின்றன..

எமது நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அவற்றை மேன்முறையீடு செய்யவும் விரைவான தீர்வுகளை பெறவும் "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ அரசியலமைப்பு ரீதியாக ஏற்பாட்டை செய்ய வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் சபையில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இப்படியான ஏற்பாடுகள் இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளன. எமது நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நலன் கருதி "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வர வேண்டும். .மேலும், மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தை உருவாக்கித் தருமாறும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரவை அனுமதியுடன் மாகாண சபைகளினூடாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வரும் கல்வி அமைச்சு கிழக்கு மாகாணத்தில் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்தத் தேவையை பூர்த்தி செய்ய அண்மையில் கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்திருந்ததும் துரதிஷ்டமாக அந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலான ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

No comments: