News Just In

4/14/2024 03:59:00 PM

நவீன காலத்தில் சமய, சமூக, பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமையாக மாறி விட்டது : சாளம்பங்கேணியில் எஸ்.எம். சபீஸ்



மாளிகைக்காடு செய்தியாளர்

நவீன காலத்தில் புதுமைகள் புகுந்து பாரம்பரியங்கள் அழிந்துவரும் இந்த காலகட்டத்தில் சமய, சமூக, பாரம்பரியங்களை பாதுகாக்கவேண்டியது எமது தலையாய கடமையாகும். பெருநாள் காலங்களில் பெருநாள் கொண்டாட்டங்கள் அழிந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, உண்டுவிட்டு தூங்கும் இளைஞர் சமுதாயத்திற்கு உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக பல்லின சமூக ஒற்றுமையை எடுத்துரைத்த எமது முன்னோர்களின் பெருநாள் கொண்டாட்டங்கள் மீள இந்த தலைமுறைக்கும் கொண்டுசேர்க்க வேண்டியுள்ளது என அக்கரைப்பற்று பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச சாளம்பங்கேணி அல்- குறைஷியா இளைஞர் கழகம் ஏற்பாடு செய்த நோன்புப்பெருநாள் விளையாட்டு விழாவும், பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அவர் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

முட்டி உடைத்தல், நாட்டுக்கு குண்டு போடுதல், சங்கீத கதிரை, முட்டை மாற்றுதல், மோட்டார் சைக்கிள் ஓட்டம், சுற்று ஓட்டம் என பல சுவாரசிய விளையாட்டுக்கள் இதன்போது இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேலும் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ. லத்திப், கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு உறுப்பினரும், கிழக்கின் கேடயம் பொதுச்செயலாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், கிழக்கின் கேடயம் தவிசாளர் தொழிலதிபர் ஏ.கே. அமீர், மத்தியமுகாம் ஜீ.எம்.எம்.எஸ். பிரதியதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

No comments: