News Just In

12/13/2023 11:07:00 AM

வட, கிழக்கு தமிழ் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதா: இரா. சாணக்கியன்!



இலங்கையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் தற்போது தனியார் கல்லூரிகளில் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு தனியார் கல்லூரிகளில் சர்வதேச பட்டம் பெறும் போது அவர்கள் சட்டக் கல்லூரிகளில் மூன்று வருட பரீட்சைக்கு தோற்றி சித்தியடையும் போதே அவர்கள் சட்டத்தரணிகளாக வர முடியும். Legal Education Council இனால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் தற்போது மூன்று வருட பரீட்சைக்கு தோற்றி சித்தியடைவதோடு; போட்டிப் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த பின்னரே சட்டத்தரணியாக முடியும். இதனால் LLB பட்டத்தினை நிறைவு செய்தாலும் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இது மாணவர்களுக்கு இழைக்கப்படும் ஒரு அநீதியான செயல். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் இளைஞர்கள் தனியார் கல்லூரிகளில் தமது சட்டக் கல்வியை பயின்றுள்ளனர். இவர்கள் மேலதிக கல்வியை மேற்கொள்ள வெளிநாடுகளுக்குச் செல்லுகின்ற போதிலும் இவ் அறிவிப்பினால் பல பிரச்சனைகளை எதிர் நோக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏராளம். ஆனால் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சட்டக்கல்வியை தொடரும் போது அவர்கள் சட்டத்தரணிகளாக முடியும். 

ஆனால் இலங்கையில் காணப்படும் அனைத்து பல்கலைக்கழகங்களும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் தொடர்புபட்டவை அல்ல. லண்டன் பட்டப்படிப்பினை மேற்கொண்டு, இலங்கையில் LLB இனை நிறைவு செய்து சட்டத்தரணியாக பணி மேற்கொண்டு மேலும் முதுநிலைப் பட்டத்தினைப் பெறுவதற்காக வெளிநாடு செல்ல முடியும். ஆனால் தனியார் கல்லூரிகளில் சட்டக்கல்வியை பயின்று வெளிநாடு சென்று ஏனைய பட்டப்படிப்பிற்கான கல்வியை மேற்கொள்ள துணியும் போது அவை அங்கீகரிக்கப்படாமல் ஏமாற்றத்தினை ஏற்படுத்தும். எனவே உடனடியாக இவ் வர்த்தமானியை இரத்து செய்தல் வேண்டும்.

ஜனாதிபதி பல்கலைக்கழகங்களை அதிகரிக்கப்போவதாகவும், தனியார் பல்கலைக்கழகங்கள் மூலமாக மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கப் போவதாகவும் ஆசை வார்த்தைகளை பாராளுமன்றத்தில் கூறுகிறார். ஆனால் அவர் கூறிய வார்த்தைகளுக்கு மாறாக அவரின் செயற்பாடுகள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் கற்று சட்டத்தரணியாக வருவோர் நீதிமன்றத்தில் மட்டுமல்ல ஏனைய வேலைகளிலும் ஈடுபட முடியாது. அத்துடன் அவர்கள் அரசாங்கத்திடம் வேலை கொடுக்கும் படி கேட்கப்போவதுமில்லை. ஆகவே மாணவர்களுக்கான சந்தர்ப்பத்தினை எதற்காக வீணடிக்கின்றீர்கள்? எனும் கேள்வியினையும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்கள் எழுப்பியுள்ளார்.


No comments: