News Just In

5/10/2023 11:02:00 AM

களுத்துறை காட்டுப்பகுதியில் பல மாணவிகள் துஷ்பிரயோகம்! ஆசிரியர் தப்பியோட்டம்:




களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணிதம் கற்பிக்கும் குறித்த ஆசிரியர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும், ஆசிரியரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று மாலை (09.05.2023) வரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன், மாணவிகளை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவித்து களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது காரில் அழைத்துச் சென்று காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சூம் தொழில்நுட்பம் மூலம் மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த இணைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் இல்லாத நேரத்தில் ஆடைகளை அகற்றுமாறு அச்சுறுத்தி, அவற்றை தனது கைத்தொலைபேசியிலும் அவர் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் தனது மடிக்கணினியில் அனைத்து காணொளிகளையும் சேமித்து வைத்திருந்ததை அவரது மனைவி கண்டுபிடித்து, மாணவிகளின் பெற்றோருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பகுதி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் பிரிவு குற்றத்தடுப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: