News Just In

5/16/2023 11:37:00 AM

முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த பொலிஸாருக்கு உள்ளக விசாரணை!





முள்ளிவாய்க்கால் கஞ்சி குடித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாருக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கடந்த (10.05.2023) அன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

இதன்போது ஏ9 பிரதான வீதியில் பயணிப்பவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இரண்டு பொலிஸாருக்கு உள்ளக விசாரணை

இந்த சந்தர்ப்பத்தில் வீதியில் பயணித்த கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த வீதி போக்குவரத்து பொலிஸாரும் பல்கலைகழக மாணவர்கள் வழங்கிய முள்ளிவாய்க்கால் கஞ்சியினை சிரட்டையில் பெற்று குடித்துள்ளனர்.

இதன் பின்னர் வீதி போக்குவரத்து பொலிஸார் முள்ளிவாய்க்கால் கஞ்சி குடிக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளதுடன் அவை சிங்கள ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இதனை தொடர்ந்தே குறித்த இரண்டு பொலிஸார் மீதும் விசாரணையை மேற்கொள்ளுமாறு கொழும்பிலிருந்து தகவல் வழங்கப்பட்டு அவர்களுக்கு உள்ளக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2009 இறுதி யுத்தத்தின் போது உணவின்றி தவித்த மக்களுக்கு அப்போது அவர்களின் உயிர்களை பாதுகாக்க கஞ்சி வழங்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் வருடந்தோறும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: