News Just In

4/03/2023 02:29:00 PM

கூட்டுறவு மூலமாக கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்து தருவதில் பற்றுறுதியுடன் உள்ளோம் - தலைமை கூட்டுறவு உத்தியோகத்தர் பரீட் உறுதி





நூருல் ஹுதா உமர்
கூட்டுறவு துறை மூலமாக கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்து தருவதற்கு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் பற்றுறுதியுடன் செயற்படுகின்றது என்று அம்பாறை மாவட்டத்தின் கூட்டுறவு தலைமை உத்தியோகத்தர் எம். ஐ. எம். பரீட் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சமாசத்தால் வீரமுனை ஐங்கரன் கிராமிய மகளிர் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் 05 உறுப்பினர்களுக்கு தையல் இயந்திரம் மானிய அடிப்படையில் வழங்கப்பட்டது.

சங்கத்தின் தலைவி வித்தகர் எஸ். யு. செசலியா தலைமையில் வீரமுனையில் இடம்பெற்ற சம்பிரதாயபூர்வ கையளிப்பு வைபவத்தில் சமாச தலைவர் எஸ். லோகநாதன், சமாசத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். இராமகிருஷ்ணன், சங்கத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். இராஜசேகர் அடங்கலான பேராளர்கள் கலந்து கொண்டனர்.


இங்கு தொடர்ந்து பிரதம விருதினர் உரையாற்றியபோது பரீட் தெரிவித்தவை வருமாறு:
 கூட்டுறவு துறை மூலமாக கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பதே கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் இலட்சிய நோக்கம் ஆகும். கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொடுக்கின்ற வேலை திட்டங்களுக்கு உதவி, ஒத்தாசை, வழிகாட்டல் வழங்குவதற்கு எப்போதும் தயாராகவே உள்ளனர்.


நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளது. இதனால் சுய தொழில் மற்றும் கைத்தொழில் முயற்சிகள் மூலமாக மேலதிக வருமானத்தை ஈட்டி வாழ்வாதாரத்தை கிராமிய மக்கள் சரி செய்ய வேண்டி உள்ளது

. அந்த வகையில் சமாசத்தால் வீரமுனை ஐங்கரன் கிராமிய மகளிர் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன. இவ்வாறான உதவிகள் மூலம் பயனாளிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். அதே நேரம் துஷ்பிரயோகங்கள் இடம்பெற கூடாது ”

சமாச தலைவர் எஸ். லோகநாதன் பேசியபோது இந்த வருடம் சமாசம் மேற்கொண்டு உள்ள முதலாவது வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் இதுவே ஆகும், புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் எமது வேலை திட்டங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி வருகின்றனர், அந்த வகையில் தையல் இயந்திரங்களை வாங்குவதற்கு தனிப்பட்ட வகையில் நிதி பங்களிப்புகளை வழங்கிய புலம்பெயர் தமிழ் உணர்வாளர்களுக்கு இத்தருணத்தில் நன்றிகளை தெரிவிக்கிறேன் என்றார்.





No comments: