News Just In

2/17/2023 10:04:00 AM

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் - விசாரணையில் வெளியான தகவல்




மத்துகம - குருதிப்பிட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட இளம் தந்தையின் சடலம் அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சிறுவர் தடுப்பு நிலையத்தில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மத்துகம - குருதிப்பிட்ட பிரதேசத்தில் வசித்து வந்த ரங்கவிராஜ் ஜயசிங்க என்ற 34 வயதுடைய ஆசிரியராவார்.

கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் தனது வீட்டுக்கு தேவையான சில பொருட்களை எடுத்து வருவதற்காக கல்மட்ட பிரதேசத்திற்குச் சென்ற போது எதிர்பாராத விதமாக இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்த நபர் வீதியில் பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த மூன்று மாணவர்களை நிறுத்தி அறிவுரை வழங்கி எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த மாணவர்கள் பாதுகாப்பு தலைக்கவசத்தை கொண்டு ஆசிரியரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த விராஜ் வெலிபன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 11 மாத பெண் குழந்தையின் தந்தை எனவும், குழந்தையின் பிறந்த தினத்திற்காக பல ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், தொழில் வாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல தயாராகி வந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த தாக்குதலை மேற்கொண்ட மாணவர்கள் உயிரிழந்த நபரின் மனைவியிடம் 11 ஆம் தரத்தில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

சமூகத்தின் மீதான அக்கறையுடன் ஒரு ஆசிரியராக தனது கடமையை செய்த நபர் மீதான மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட கொலை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தமது எதிர்ப்பினையும், இரங்கல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், சிலர் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் குறித்து பொறுப்பாக செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

No comments: