News Just In

9/09/2022 05:59:00 PM

மதுரங்குளி - பாலசோலை பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு!

புத்தளம் , மதுரங்குளி - பாலசோலை பகுதியில் தோட்டம் ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட சிறிய கட்டடமொன்றுக்குள் இருந்து அழுகிய நிலையில் சடலமொன்று இன்று (09) மீட்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய குமார என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், மதுரங்குளி பாலசோலை பகுதியில் உள்ள தோட்டமொன்றில் கூலிக்கு இருக்கும் தனது நண்பரை பார்ப்பதற்காக அடிக்கடி வந்து செல்பவர் என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர், கடந்த டிசம்பர் மாதம் முதல் தனது நண்பர் வசிக்கும் பாலசோலை பகுதியில் உள்ள தோட்டத்தில் நண்பருடன் வசிந்து வந்துள்ளதாகவும், கடந்த சனிக்கிழமை இரவு 7 மணி முதல் முதல் நண்பரின் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதனையடுத்து, நேற்று வியாழக்கிழமை (08) இரவு தோட்டத்தில் மின்சாரம் பெறுவதற்காக கட்டப்பட்டுள்ள சிறிய கட்டடம் ஒன்றுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதனை அவதானித்த நண்பரின் மகன், இதுபற்றி தனது தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்று பின்னர் சம்பவம் பற்றி மதுரங்குளி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மதுரங்குளி பொலிஸாரும், புத்தளம் பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து கள விசாரணைகளை இன்று ஆரம்பித்தனர்.

குறித்த சிறிய கட்டடத்திற்குள் கிடத்த சடலம் முழுவதும் அழுகிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த சிறிய கட்டடத்தின் கதவு பூட்டப்பட்டிருந்ததுடன், பொலிஸார் அக்கதவினை உடைத்து சடலத்தை வெளியே எடுத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.ஷம்சு ராபி சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதிவான் விசாரணையை நடத்தியதிடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: