News Just In

7/25/2022 05:49:00 PM

எரிபொருள் விநியோக முறைமை குறித்து வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விடுத்துள்ள அறிவிப்பு!




தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை நாளை (26) செவ்வாய்க்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும்.

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வாகன இலக்கத் தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறைமை இரத்து செய்யப்படும் என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை நாளை செவ்வாய்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் , ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்த முறைமை பின்பற்றப்படும்.

அத்தோடு ஆகஸ்ட் முதலாம் திகதி வரை வாகன இலக்கத் தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறைமையும் நடைமுறையிலிருக்கும்.

தொழிநுட்ப சிக்கல்கள் காணப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில், அவை சரி செய்யப்படும் வரை வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

60 சதவீதமான இடங்களில் ஏற்கனவே இந்த முறைமை பரிசீலிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையில் எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமையளிக்கப்படும்.

சகல சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களிடமும் இந்த முறைமையை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படும்.

தேசிய எரிபொருள் அனுமதி அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்து , இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

தொழில் நிமித்தம் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு இவ்வார இறுதிக்குள் அது குறித்த தகவல்கள் வழங்கப்படும்.

அத்தோடு அவை அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படும். மின் பிறப்பாக்கிகள் மற்றும் வீட்டுத்தோட்ட இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான பதிவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்க்பபடும்.

பொலிஸ் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்படும்.

அதன்படி ஒவ்வொரு முச்சக்கர வண்டிகளும் ஒரு குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திற்காக ஒதுக்கப்படும். டிப்போக்கள் அல்லது எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு ஒதுக்கப்படும் பேரூந்துகளை போக்குவரத்து அமைச்சு பதிவு செய்யும்.

சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கைத்தொழில் மற்றும் ஏனைய சேவை வழங்கும் துறைகள் எரிபொருள் நிலையங்களில் தங்களின் வாகனங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் கியு.ஆர். முறைமை மாத்திரமே நடைமுறையிலிருக்கும். வாகன இலக்க தகட்டின் இறுதி எண் முறைமை இரத்து செய்யப்படும்.

எதிர்வரும் 10 நாட்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments: