News Just In

7/06/2022 05:51:00 PM

பொது மக்களின் போக்குவரத்து வசதிகளுக்காக மட்டு மாநகருக்குள் அறிமுகமாகிறது குறுந்தூர பேரூந்து சேவை!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து அன்றாட போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது சிரமங்களை எதிர்நோக்கிவரும் பொது மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் தற்காலிகமாக குறுந்தூர பேரூந்து (City Shuttle Service) சேவையினை தனியார் பங்களிப்புடன் முன்னெடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் சம்மந்தமாக இன்றைய தினம் (06) இடம்பெற்ற கலந்துரையாடலினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விலையேற்றம் போன்ற காரணங்களால் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் வசிக்கும் மக்கள் தமது போக்குவரத்து செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத வகையில் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக, முற்சக்கர வண்டி உள்ளிட்ட பிரயாண சேவைகளை முன்னெடுப்பதற்கு கூட எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால், மிகக் குறைந்தளவிலான வாகனங்களே சேவையில் ஈடுபட்டு வருவதுடன் அவற்றின் வாடகைக் கட்டணங்களும் சடுதியாக அதிகரித்துள்ளமையினையும் அவதானிக்க முடிகின்றது.

இதனால் காரணமாக உள்ளக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள், மாணவர்கள், அரச தனியார் அலுவலகங்களின் பணியாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் எனப் பலர் தமது போக்குவரத்துச் செலவினைக் கருத்திற்கொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு திரு.லியோன் லோறன்ஸ் எனும் தனிநபரின் ஊடாக குறித்த குறுந்தூர பேரூந்து (City Shuttle Service) சேவையினை தற்காலிகமாக முன்னெடுப்பதற்கான ஒழுங்குகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அதற்கான போக்குவரத்து ஒழுங்கு பத்திர அனுமதிக்காக கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் அதிகார சபைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவ் அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் மிகக் குறைந்த கட்டணத்தில் இச் சேவையினை விரைவில் ஆரம்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் மேற்படி சேவைக்கான ஒருவழிக் கட்டணமான பொதுமகன் ஒருவருக்கு 50 ரூபாயும், பாடசாலை மாணவர்களுக்கு ரூபா 40 ரூபாயும் அறவிடப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இச் சேவையினை நவீன தகவல் தொழில்நுட்பத்தின் துணையுடன் பொது மக்கள் தமது கையடக்க தொலைபேசியின் ஊடாக கண்காணித்துக் கொள்ளும் வசதிகளும் நிறுவப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: