மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் எரிபொருள் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்ததால் நீண்ட நாட்களாக மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். இம்மாவட்டத்தில் ஐ.ஒ.சி. எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மாத்திரம் மக்களுக்கு அண்மைக்காலமாக எரிபொருள் வழங் கப்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தற்பொழுது எரிபொருள் வழங்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன .
அத்துடன் இரண்டு ஐ.ஒ. சி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மக்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சனவிஜயசேகரவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வாகன இலக்கத்தகடுகளின் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் பணிகளை தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமுலாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த பணிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய பிரதேச செயலாளர்களின் பங்களிப்புடன் இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. வாகன இலக்கத் தகடுகள் அடிப்படையில் இந்த எரிபொருள் வழங்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்களுக்குரிய தினங்களில் எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் நீண்ட வரிசைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுகின்றார்.
(மொகமட் தஸ்ரிப் லத்தீப்)
No comments: