News Just In

7/24/2022 07:21:00 AM

விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு எமனாக வந்த கார்!

வீட்டுக்கு முன்னால் உள்ள முற்றத்தில் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த ஏழு வயது சிறுமியின் மீது கார் ஒன்று மோதியதில் பலத்த காயங்களுக்குள்ளான சிறுமி உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மொரகஹஹேன, மில்லவ பொல்வத்தையைச் சேர்ந்த தினிதி சத்சராணி ஜான்ஸ் என்ற சிறுமியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்து சற்று தூரத்தில் சிறிய மலையுடன் கூடிய பக்கவாட்டு வீதியில் வந்து கொண்டிருந்த காரை சாரதி கட்டுப்படுத்த முடியாமல் சிறுமியின் வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு உள் நுழைந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கார் முற்றத்தில் மோதியவுடன், அதிவேகமாக வீட்டின் பின்புறம் சென்று கார் நின்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கார் அதிவேகமாக பயணித்த போது வீட்டின் சுவரில் மோதி பள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த சிறுமி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: