- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் திங்கட்கிழமை(25) எரிபொருள் வழங்கப்பட்டன. இதன்போது பிரதேச செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “குடும்ப வினியோக அட்டை” யின் பிரகாரம் எரிபொருள் பெறுவதற்கு இதன்போது வருகை தந்திருந்வர்களை பிரதேச செயலக அதிகாரிகள் பதிவு செய்த பின்னர் அரசாங்கத்தினால் நிருணயிக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளுக்கு 1500 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்கு 2000 ரூபாவிற்கும், கார்களுக்கு 7000 ரூபாவிற்கும் எரிபொருள் வழங்கப்பட்டதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் குடும்ப அட்டையில் பதிவீடு செய்த பின்னர் ஒவ்வொருவருக்கும் சுமுகமாக நிலையில் எரிபொருள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது இடைநடுவே பொலிசாரின் தலையீடு காரணமாக தம்மால் தொடர்ந்து மேற்குறித்த நடைமுறையின்கீழ் மக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் போனதாகவும், அங்கிருந்த பாதுகாப்பு தரப்பினரால் அரச உத்தியோகஸ்த்தர்கள், அச்சுறுத்தல்களுக்கு உட்பட்ட காரணத்தினாலும், அக்கடமையிலிருந்து இடைநடுவே வெளியேறியதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரிபொருள் யாவருக்கும் வழங்க வேண்டும், குறிப்பாக தூர இடங்களிலிருந்து வருபவர்கள், குடும்ப அட்டை வைத்திருக்கமாட்டார்கள், இந்நிலையில் அவர்களுக்கும் எரிபொருள் வழங்க வேண்டும், எனவே தாம் அனைவருக்கும் சீராக எரிபொருள் வழங்குவதற்குரிய கடமைகளை முன்நெடுத்துள்ளதாக பொலிசார் இதன்போது தெரிவித்தனர்.
எது எவ்வாறு அமைந்தாலும், அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளுக்கு 1500 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்கு 2000 ரூபாவிற்கும், கார்களுக்கும், 7000 ரூபாவிற்கும் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகளுக்கு மாறாக சிலர் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களுடைய வாகனங்களின் எரிபொருள் கொள்ளளவு நிரம்பும் வரையில் எரிபொருட்களை நிரப்பிச் செல்வதனாலும், வரிசை ஒழுங்குகளை மீறி சிலர் எரிபொருட்களைக் கொள்வனவு செய்வதனாலும், நாட்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு எரிபொருளின்றி திரும்பிச் செல்லும் நிலமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனினும் அரசாங்கம் கியு.ஆர் கோர்ட் அடிப்படையில் அனைவருக்கும் சீரான முறையில் எரிபொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments: